டாஸ்மாக் அகற்றப்பட்ட பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவிலில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீவாரி நகர் பகுதியில், தனியார் கட்டடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வந்தது.

இந்த கடை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்ததால், கடையை அகற்ற வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, கடந்தாண்டு டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.

இந்நிலையில், சமீப காலமாக இந்த பகுதியில், 24 மணி நேரமும், கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடையை ஒட்டி, கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

மறைமலைநகர் அண்ணா சாலை, கோவிந்தாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மது விற்பனை மற்றும் சாலை ஓரம் அமர்ந்து மது அருந்துவோரை, போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர்.

ஸ்ரீவாரி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

அந்த கட்டடத்தில், விடுமுறை தினங்கள் மற்றும் இரவு மற்றும் காலை நேரங்களில், அதிக விலைக்கு கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement