தி.மு.க.,வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்த அதே கட்சி பேரூராட்சி தலைவி

திருநெல்வேலி:மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாவுக்கு எதிராக தி.மு.க.வினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று வெற்றிகரமாக நிறைவேறியது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். 10 பேர் தி.மு.க., இருவர் அ.தி.மு.க., காங்., பா.ஜ., சுயேச்சை தலா ஒருவர். தலைவி பதவிக்கு மாஞ்சோலை எஸ்டேட் பகுதி தி.மு.க., கவுன்சிலர் அந்தோணியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

ஆனால் பெரும்பான்மையான தி.மு.க. கவுன்சிலர்களுக்கு அவர் மீது அதிருப்தி இருந்ததால் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தனர்.

ஏற்கனவே ஒருவர் ராஜினாமா செய்திருந்த நிலையில் நேற்றைய ஓட்டெடுப்பில் அந்தோணியம்மாள் பங்கேற்கவில்லை. மற்ற 13 கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

செயல் அலுவலர் ஆஷா ராணி தேர்தலை நடத்தினார். 13 கவுன்சிலர்களும் அந்தோணியம்மாளுக்கு எதிராக ஓட்டளித்தனர். அவர் பதவி இழந்தார்.

இது குறித்து அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும் என செயல் அலுவலர் ஆஷா ராணி தெரிவித்தார்

Advertisement