பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான்; இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு

1


புதுடில்லி: பாகிஸ்தானை பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு என்று அமெரிக்கா முத்திரை குத்த வேண்டும் என்று பென்டகன் முன்னாள் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.


பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்திய நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. அதனை வெற்றிகரமாக இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்யும் வகையில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இந்த நிலையில், பாகிஸ்தானை பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு என்று அமெரிக்கா முத்திரை குத்த வேண்டும் என்று பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது; லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளை தனிப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. ஆனால், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தானை அறிவிக்கவில்லை.


தற்போதைய சூழலில், பாகிஸ்தானை பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும். மேலும், இந்தியாவுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்.


பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு. ஒவ்வொரு முறையும் அரசாங்கம் தோல்வியை சந்திக்கும் போது, மக்களை திசைதிருப்ப, சிறுபான்மையினர் மீது துப்பாக்கிகளை திருப்புகிறது. இதுதான் தோல்வியடைந்த அரசின் நாடகம்.
பயங்கரவாதிகளின் தாயகம் பாகிஸ்தான் விளங்கி வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க முடியாத சூழலில், மேற்கத்திய நாடுகளை பாகிஸ்தான் அதிகாரிகள் முட்டாள்களாக்க பார்க்கின்றனர். தற்போது இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement