கோழிக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு மேலாண்மை செய்ய முறையீடு

கோவை : கோழிக் கழிவுகளை அந்தந்த மண்டலங்களிலேயே மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி கமிஷனரிடம் முறையிடப்பட்டுள்ளது.

குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்புக் கூட்டுக்குழுவினர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் நேற்று அளித்த மனு:

கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக குப்பை கிடங்கில் கோழிக்கழிவுகளை வெளியில் எடுத்துசெல்லும் தனியார் நிறுவனத்தினர், கிடங்கு வளாகத்தில் குழிதோண்டி புதைக்கின்றனர்.

அதனால், நிலம், நிலத்தடி நீர் மாசுபடுகிறது. மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர் ஒரு பகுதியில் ஆழ்குழாய் நீர் மாசடைந்து, மக்கள் அந்நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகாரமாகும் கோழிக் கழிவுகளை வெள்ளலுார் குப்பை கிடங்கிற்கு கொண்டுவராமல், அந்தந்த மண்டலங்களிலேயே மேலாண்மை செய்ய வேண்டும். அல்லது வெளியே எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், மாநகரில் சேகாரமாகும் 1,200 டன் குப்பையை ஐந்து மண்டலங்களிலேயே திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும்.

கடந்த, 20 ஆண்டுகளாக எங்கள் பகுதி மக்கள் தினமும் சந்திக்கும் கஷ்டங்களுக்கு தீர்வுகாண கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement