போலீஸ் ஸ்டேஷனுக்குள் அடிக்கடி புகும் பாம்புகள் விஷபூச்சிகளின் வாழ்விடமான வாகனங்கள்

கம்பம்: போலீஸ் ஸ்டேஷன்களில் பறிமுதல் செய்த வாகனங்கள் விஷபூச்சிகள் வாழ்விடமாக மாறியதால் அடிக்கடி பாம்புகள் ஸ்டேஷனுக்குள் நுழைந்து விடுவதால் போலீசார் அச்சமடைகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சப்டிவிசனிலும் குறைந்தது 5 ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள், கார்கள், ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் என பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கம்பம் வடக்கு,தெற்கு, உத்தமபாளையம், சின்னமனுார் ஸ்டேஷன்கள் மட்டும் குறைந்தது 500 முதல் ஆயிரம் டூவீலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுக் கணக்கில் நிறுத்தியுள்ள வாகனங்களில் செடி, கொடிகள் வளர்ந்து பாம்புகள், பூரான்கள் என விஷ ஜந்துக்கள் வாழ்விடமாக மாறி வருகிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் தர வருபவர்களும், போலீசாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. உத்தமபாளையம், கம்பம், சின்னமனுார் ஸ்டேஷன்களில் வெளியே அமர்ந்து விசாரணை செய்து கொண்டிருக்கும் போது, பாம்புகள் அடிக்கடி வந்து களேபரம் ஆவது வாடிக்கையாகி வருகிறது. எனவே பறிமுதல் வாகனங்களை ஏலம் விட எஸ்.பி.சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement