வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!

3


நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவம் உள்ளிட்ட முக்கிய கட்டுமான அலுவலகங்களில் தாக்குதல் நடத்தப்படவில்லை.


கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போரில், இந்தியாவுடன் தோற்ற பின், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் தீவிரம் காட்டியது. பார்லிமென்ட் தாக்குதல், மும்பை, உரி, பதான்கோட் தாக்குதல், கடைசியாக பகல்ஹாம் தாக்குதல் என, 25 ஆண்டுகளில், 350க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் ராணுவத்தினரை பலி வாங்கினர்.


இதற்கெல்லாம் காரணம், ராணுவம், ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் பாக்., பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் தான். குறிப்பாக, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரில் தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்தின.


இந்த அமைப்பின் தலைவர்களான சையத் சலாஹுதீன், ஹபீஸ் சையது, மசூத் அசார் ஆகியோர், பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மசூதிகளில் பதுங்கியிருந்து, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்தனர். காஷ்மீர் இளைஞர்களையும், 'மூளைச் சலவை' செய்து தங்கள் அமைப்பில் சேர்த்துக் கொண்டனர்.

அஜ்மல் கசாப்



கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் உயிரோடு பிடிக்கப்பட்டான். இவனிடம் இருந்து பெறப்பட்ட தகவலில், மும்பை தாக்குதலுக்கு காரணம், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் தலைவன் ஹபீஸ் சயீது, இப்போதும் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளான். தற்போது, பஹல்காமில் தாக்குதல் நடத்தியுள்ள தி ரெஸிஸ்டன்ட் பிரன்ட் அமைப்பு, லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பு தான்.


பாகிஸ்தானில் முரித்கே தைபா மார்கஸ் எனும் பயங்கரவாத பயிற்சி கூடத்தின் மீது இந்தியா நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஹபீஸ் சயீத்தால் 2000ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வளாகம், பயங்கரவாத அமைப்பின் பயிற்சி மற்றும் கருத்தியல் மையமாக உள்ளது. மும்பை தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

மசூத் அசார்



''எனது குடும்பத்தில் 10 பேர், கூட்டாளிகள் நான்கு பேரை கொன்றுவிட்டார்களே... வருத்தம் இல்லை; விரக்தி இல்லை; அவர்கள் இறக்கவில்லை; தியாகிகள்'' என, சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை கதற வைத்தது இந்தியா. ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் வசிப்பிடமான, பாகிஸ்தான் பகவல்பூரில் நடத்திய தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் மனைவி, மற்றொரு மருமகள் என நெருங்கிய சொந்தங்கள் கொல்லப்பட்டனர். பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவனது தம்பி அப்துல் ரவுப் அசாரும் நேற்று இறந்துள்ளான்.


இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்களையும், ராணுவ அதிகாரிகளையும் கொன்று குவித்தவன் மசூத் அசார். இன்று அந்த பயங்கரவாதியின் வீடு புகுந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், தாக்குதல் நடத்தியது நமது பாதுகாப்பு படை. இது ஒவ்வொரு பயங்கரவாதிக்கும், பாடமாக இருக்கும்.

தாக்குதலுக்கு தக்க பதிலடி



இந்தியா மீது எந்த பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தியதோ, அவற்றின் மீது மட்டுமே, ஆபரேஷன் சிந்துார் ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராமாயணத்தில், 'யார் என் மீது தாக்குதல் நடத்தினார்களோ, அவர்கள் மீது தாக்குவேன்' என, அனுமன் கூறியது போல், நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை குறி வைத்து, தாக்குதல் நடத்தப்பட்டது. அனுமன் கொள்கையை நாங்களும் பின்பற்றியுள்ளோம்.

- - ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர்




--நமது நிருபர்-

Advertisement