பிளஸ் 2 தேர்வில் மூதாட்டி வெற்றி

கோவை : 'வயது தடைனு யாரு சொன்னாங்க?' என தன்னம்பிக்கையுடன் பேசும் ராணி அம்மாள், 70 வயதிலும் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கணவரின் மறைவுக்குப் பிறகு, 2020ல் மீண்டும் கல்வியை தொடர நினைத்தேன். யோகா, சமையல், சித்தா போன்ற துறைகளில் ஆர்வம் அதிகம், சட்டத்தையும் கற்க விரும்பினேன். ஆனால், பிளஸ் 2 சான்றிதழ் இல்லாததால் உயர்கல்விக்கான முயற்சிகள் தோல்வியடைந்தது.பின், பிளஸ் 1 தேர்வு எழுதி, அதன் பிறகு பிளஸ் 2வை வெற்றிகரமாக எழுதி முடித்தேன்.

1965ம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கே பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், கணினி முறையில் தனித் தேர்வர்களாக தேர்வு கட்டணத்தையும் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது. ஆனால் நான் 1950ம் ஆண்டு பிறந்தவர். எனவே, சிறப்பு அனுமதி பெற்றே இந்தத் தேர்வில் பங்கேற்றேன். படிக்க ஆர்வம் இருந்தால் வயது தடையாக இருக்க முடியாது. இவ்வாறு,அவர் கூறினார்.

Advertisement