பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு

5


புதுடில்லி: பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய ஒவ்வொரு ஏவுகணையும் தாக்கி அழிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பாகிஸ்தான் ராணுவம் நேற்று ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பல இடங்களில் ஏவுகணைகள் மற்றும் டுரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த ஏவுகணைகள் இலக்குகளை தாக்குவதற்கு முன்னரே, வழிமறித்து தாக்கி வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பின் பலம் கடந்த 11 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதிநவீன ஆளில்லா ஏரியல் அமைப்புகள்,எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம், பாரக் -8 ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணை, டிஆர்டிஓ தயாரித்த டுரோன் எதிர்ப்பு ஆயுதம் ஆகியன வலிமையான பாதுகாப்பு கவசமாக திகழ்கின்றன.

இதன் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய எச்கியூ-99வான் பாதுகாப்பு கவசம் அழிக்கப்பட்டதுடன், ரேடார் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.

இந்தியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் பணி, 2014ம் ஆண்டு முதல் துவங்கியது. இதில் ஒரு பகுதியாக எஸ் 400 வான்பாதுகாப்பு கவசங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 3 கருவிகள், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வருகிறது.

மேலும், இஸ்ரேலிடம் இருந்து பாரக் -9 குறுகிய தூரத்தில் தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வாங்கப்பட்டது. இவை பஞ்சாபின் பதிண்டாவில் உள்ள ராணுவ தளத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும், ஆகாஷ் ஏவுகணை பேட்டரிகள் மற்றும் டிஆர்டிஓ., தயாரிக்கும் டுரோன் எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தியது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள், தற்கொலை டுரோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இந்த டுரோன்கள் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
இஸ்ரேலின் ஹாரோப் டுரோன்கள், இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டது. இவை கராச்சி மற்றும் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு கவசத்தை அழிக்க பயன்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement