புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு நேற்று மீண்டும் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று காலை கம்பன் கலையரங்கில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் காலை 11:30 மணி அளவில் கவர்னர் மாளிகைக்கு இ-மெயில் வந்தது. அதில், கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், போலீஸ் தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்த எஸ்.பி., பக்தவச்சலம், பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவினர், கவர்னர் மாளிகையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கம்பன் விழாவை முடித்துக் கொண்டு கவர்னர் கைலாஷ்நாதன், கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். போலீசார் தொடர்ந்து சோதனையை மேற்கொண்டதில், இ-மெயிலில் வந்த தகவல் புரளி என்பது உறுதியானது.

இதே கவர்னர் மாளிகைக்கு கடந்த 14 மற்றும் 22ம் தேதிகளில் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இ-மெயில் 'டார்க் நெட்' வழியே வந்ததை தொடர்ந்து மத்திய சைபர் கிரைம் பிரிவின் உதவியை புதுச்சேரி போலீசார் நாடியுள்ள நிலையில், மூன்றாம் முறையாக நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் குழப்பம்



புதுச்சேரியில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஜிப்மர், கவர்னர் மாளிகை மற்றும் முதல்வர் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது போலீசார் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement