ரோட்டில் நிறுத்தப்படும் 'ஆம்னி' பஸ்கள் பஸ் ஸ்டாண்டில் நிரந்தர நெரிசல்

உடுமலை : பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில், நெரிசல் மிகுந்த பகுதியில், 'ஆம்னி' பஸ்களை நிறுத்தி பயணியரை ஏற்றுவதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இப்பிரச்னைக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

உடுமலை பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வழியாக பழநி ரோட்டில், இணையும் பை-பாஸ் ரோடு குறுகலாக உள்ளது.

இந்த ரோட்டில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உட்பட வழித்தட பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் நுழையும் நுழைவாயில் பகுதி அமைந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், பை-பாஸ் ரோடு வழியாகவே சென்று, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைய வேண்டும். இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் நிரந்தரமாக இருக்கும்.

இந்நிலையில், உடுமலையில் இருந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, 25க்கும் அதிகமான 'ஆம்னி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள் அனைத்தும், இரவு 8:00 மணிக்கு மேல், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலை ஒட்டி, பை-பாஸ் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.

பயணியர் ஏறும் வரை வரிசையாக, நிறுத்தப்படும் 'ஆம்னி' பஸ்களால், அவ்வழியாக பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில், பை-பாஸ் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.

ஆம்னி பஸ்களில் பயணியரை வழியனுப்ப வருபவர்களும், வரிசையாக தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். எனவே, சிக்கல் அதிகரிக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியில் வருவதிலும் பிரச்னை ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கான தீர்வு குறித்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார், ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement