ரூ.7 ஆயிரம் சம்பளத்தில் பணிவாய்ப்பு பெறுவதற்கு ரூ.7 லட்சம்பே! அங்கன்வாடி பணிக்கு உயர்கல்வி முடித்தோரும் மனு

தமிழக சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 50 சதவீத காலிப்பணியிடங்கள் உள்ளன. நீண்ட காலமாக காலியாக உள்ளதால் ஒருவரே 3, 4 மையங்களை கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் ஊழியர் சங்கங்கள் காலியிடங்களை நிரப்ப போராடி வந்தன.

குவிந்த விண்ணப்பங்கள்



தற்போது சத்துணவுத் திட்டத்தில் 8997 சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி மையங்களுக்கு 4191 அமைப்பாளர்கள், 3592 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர்களில் சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம், அங்கன்வாடி அமைப்பாளருக்கு ரூ.7700, உதவியாளர்களுக்கு ரூ.4100 என அறிவித்துள்ளனர்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு பிளஸ் 2, உதவியாளர்கள், சத்துணவு சமையல் உதவியாளர்கள் 10ம் வகுப்பு கல்வித்தகுதி. இந்த அறிவிப்புக்கு பின்பு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் குறைந்தது 300 முதல் 400 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஒரு பணியிடத்திற்கு 15க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பேரையூர் ஒன்றியத்தில் மட்டும் அங்கன்வாடி மையங்களுக்கு 20 ஊழியர்கள், 9 உதவியாளர் பணியிடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள் ளன.

உயர்கல்வி முடித்தவர்கள் ஏராளம்



இவர்களில் பி.இ., உட்பட உயர்கல்வி படித்தோர் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூறுகையில், ''உயர்கல்வி பெற்றோர் சத்துணவுத் துறையில் இப்பணிக்கு நுழைந்து, சில ஆண்டுகளுக்குப்பின் கல்வித்தகுதி அடிப்படையில் காலமுறை ஊதியம் பெறும் வேறு பதவிகளை பெற்றுவிடுகின்றனர்.

அப்பணியிடம் காலியாவதுடன், மற்றவர்களுக்கான வாய்ப்பும் பறிபோகிறது. எனவே அந்தந்த தகுதியுள்ளோரையே நியமிக்க வேண்டும்'' என்றனர்.

இதற்கிடையே இப்பணியிடங்களுக்கு அரசியல் பின்னணியுடன் பரிந்துரைப்பதாகக் கூறி வசூல் வேட்டையிலும் சிலர் இறங்கியிருப்பதாக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூறுகின்றனர்.

திண்டுக்கல்லில் இது பிரச்னையானதால், மதுரையில் அடக்கி வாசிக்கின்றனர். ரூ.3 ஆயிரம் தொகுப்பூதிய பணிக்கு ரூ.3 லட்சம், ரூ.7 ஆயிரம் ஊழியர் பணிக்கு ரூ.7 லட்சம் வரை கேட்பதாக கவலை தெரிவித்தனர். இப்பணியிடங்களை அரசியல் பின்னணியின்றி, தகுதி அடிப்படையில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement