போர் குறித்து தவறான சமூக வலைதள பதிவுகள் நீக்கம்; தண்டனைக்குரிய குற்றம் என எச்சரிக்கை

5

மும்பை: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் குறித்த தவறான தகவல்களைக் கொண்ட 5,000 சமூக வலைதள பதிவுகளை, மஹாராஷ்டிரா சைபர் குற்றத் தடுப்பு பிரிவு நீக்கியது.

இது குறித்து மஹாராஷ்டிரா சைபர் குற்றத்தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்டை நாடுகளின் ராணுவத்தின் நகர்வுகள், முக்கிய நடவடிக்கைகள், குறித்து போலியான தகவல்கள் சமூக ஊடகங்களில் காணப்பட்டன. அவ்வாறு தவறாக பதியப்பட்டிருந்த 5,000 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சரிபார்க்கப்படாத மற்றும் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மோதலை அதிகரிக்க பங்களிக்கக்கூடும்.

பாதுகாப்பான மற்றும் நம்பகமான தகவல் சூழலைப் பராமரிப்பதில் எங்களது பிரிவு முழுமையாக உறுதிபூண்டுள்ளது, தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க தள ஆபரேட்டர்கள் மற்றும் அமலாக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தெரிந்தோ தெரியாமலோ தவறான தகவல்களைப் பரப்புவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பெறும்போதும் பகிர்ந்து கொள்ளும்போதும் கட்டுப்பாடு மற்றும் விவேகத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




போர் நிறுத்தம்


இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement