மாகரலில் குழாய் உடைந்து வீணாகும் செய்யாற்று குடிநீர்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்டது ஆர்ப்பாக்கம் கிராமம். இக்கிராம குடிநீர் தேவைக்கு வெங்கச்சேரி செய்யாற்று படுகையில் ஆழ்த்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
ஆழ்த்துளை கிணறு வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீர், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள மாகரல் வழியாக ஆர்ப்பாக்கம் சென்றடைகிறது.
அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, அதன் பின் அப்பகுதி வீட்டு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, ஆர்ப்பாக்கம் சென்றடையும் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய், மாகரல் கிராம சாலையோர பகுதியில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
இதனால், ஆர்ப்பாக்கத்திற்கு போதுமான குடிநீர் சென்றடையாத நிலை இருந்து வருகிறது.
எனவே, மாகரல் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சீர் செய்து, ஆர்ப்பாக்கத்திற்கு சீராக தண்ணீர் சென்றடைய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.