கோழி பண்ணை அமைக்க மானியம் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரை

சென்னை:'நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில், பயனாளிகள் எண்ணிக்கையை, 100ல் இருந்து, 360 ஆக உயர்த்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

சென்னை, நீலகிரி தவிர்த்து பிற மாவட்டங்களில், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், கோழிப்பண்ணை அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம், கால்நடை துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் இதுவரை, 100 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. நடப்பாண்டு பயனாளிகள் எண்ணிக்கையை, 360 ஆக உயர்த்த வேண்டும் என, அரசுக்கு அதிகாரிகள் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க, கோழிக்கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, நான்கு மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு, நான்கு வயதுடைய கோழிக்குஞ்சுகள் போன்றவற்றின் மொத்த செலவில், 50 சதவீத மானியம், மாநில அரசால் வழங்கப்படுகிறது.

கோழிக்கொட்டகை அமைக்க, குடியிருப்பு மற்றும் நீர் நிலைகளில் இருந்து விலகி இருக்கக் கூடிய, குறைந்தபட்சம், 625 சதுர அடி சொந்த நிலம் இருக்க வேண்டும்.

விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஏற்கனவே, இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்கக்கூடாது. மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.

ஆர்வமுள்ள நபர்கள் அருகில் உள்ள, கால்நடை நிலையங்களில் விண்ணப்பிக்கலாம். ஒரு பயனாளிக்கு, ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து 625 ரூபாய் மானியத்தொகை வழங்கப்படும்.

ஒரு பயனாளி 72 வாரங்கள் வரை, நாட்டுக் கோழிகளை வளர்த்து, ஆண்டுக்கு 10,000 முட்டைகள் உற்பத்தி செய்ய முடியும். குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.

முட்டைகளை விற்கலாம். வளர்ந்த கோழிகள் மற்றும் சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். இவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement