ஏ.டி.எம்., கார்டை மாற்றி மோசடி 5 மாதத்துக்கு பின் வாலிபர் கைது

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, கல்லங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 48; இவர், 2024 டிச., 27ல், குமாரபாளையம் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,க்கு சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார்.
பணம் வராததால், அருகில் இருந்த வடமாநிலத்தவரிடம், ஏ.டி.எம்., கார்டை கொடுத்து பணம் எடுத்து தர சொல்லியுள்ளார். அவரும் முயற்சி செய்து பணம் வரவில்லை எனக்கூறி, தன்னிடம் இருந்த வேறு ஒரு ஏ.டி.எம்., கார்டை கொடுத்துவிட்டு சென்றார்.

வீட்டிற்கு சென்றதும், 2.15 லட்சம் ரூபாய் தன் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக மொபைல் போனில் வந்த குறுஞ்செய்தியை பார்த்து முத்துசாமி அதிர்ச்சியடைந்தார். வங்கிக்கு சென்று ஏ.டி.எம்., கார்டை பிளாக் செய்தார். இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில், திருப்பூர் அருகே, பெருமாநல்லுார் பகுதியில் இதேபோல் ஏ.டி.எம்., கார்டு மூலம் மோசடி செய்த நபர் பிடிபட்டார். அவர், குமாரபாளையம் பகுதியில் முத்துசாமியிடம் ஏ.டி.எம்., கார்டை மாற்றி மோசடியில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பீஹார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் சஹானி, 31, என்பவரை, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement