மோப்ப நாய் ராக்கிக்கு எஸ்.பி., பாராட்டு சான்று

விழுப்புரம், மே 11-

விழுப்புரம் மாவட்ட போலீசில் திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாய் ராக்கிக்கு, எஸ்.பி., சரவணன் நற்சான்றிதழ் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை போலீஸில், மோப்ப நாய் படைப்பிரிவில் குற்ற சம்பவங்களை துப்பறிய ராக்கி, ஏஸ் ஆகிய மோப்ப நாய்களுக்கும், வெடிப் பொருள்களை துப்பறிய தமிழ், ராணி மோப்ப நாய்கள் உள்ளது. போதை பொருட்களை துப்பறிய புதிதாக பஸ்டர் என்ற மோப்ப நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரகண்டநல்லுார் அருகே டி.தேவனுார் கிராமத்தில் கடந்த 6ம் தேதி இரவு பூட்டிய வீட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டது. இச்சம்பவத்தில், மோப்ப நாய் ராக்கி, சிறப்பாக செயல்பட்டு மர்ம நபர்களை கைது செய்ய உதவியது. இதனால், மோப்ப நாய் ராக்கி மற்றும் அதன் பயிற்சியாளர் ஏட்டு செல்வக்குமாருக்கு, எஸ்.பி., சரவணன் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Advertisement