ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாண உத்சவம்

செங்கல்பட்டு:ஆத்துார் தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் உற்சவம் இன்று நடக்கிறது.
செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில், புகழ்பெற்ற தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு வீற்றிருக்கும் தர்மசம்வர்தனி அம்பாள், இத்திருத்தலத்தில் பலகாலம் தங்கி, அனைவருடைய பசியை போக்க இங்கு அன்னக்கூடம் அமைத்து, அனைவருக்கும் அன்னமிட்டு பசி ஆற்றியதால், இவ்வூருக்கு பசி ஆற்றுார் என்றும், அதுவே மறுவி ஆத்துார் எனவும் அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடைபெறும். இன்று மாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், திருமுறை பாராயணம், வேதபாராயணம் சிவஸ்ரீ குமரகுரு கணபாடிகள் சதுர்வேத வித்யா கணபதி வேதபாடசாலை மாணவர்கள் நடத்துகின்றனர்.
இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 9:00 மணிக்கு, 63 நாயன்மார்களுடன், பஞ்சமூர்த்திகள் கயிலாய காட்சி மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை ஆத்துார் ஸ்ரீமுக்தீஸ்வரர் சேவா டிரஸ்ட் மற்றும் அப்பகுதி மக்கள் செய்துள்ளனர்.