மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் தேரோட்டம்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரம்மோத்சவ விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள் தினசரி காலை, மாலை வீதியுலா சென்றார்.

ஐந்தாம் நாள் உற்சவமாக, 8ம் தேதி கருட சேவையாற்றினார். ஏழாம் நாள் உற்சவமாக, நேற்று, திருத்தேரில் உலா சென்றார். ஸ்தலசயன பெருமாள், தேவியருடன் 6:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

ஸ்தலசயனருக்கு, பூதத்தாழ்வார் வஸ்திர மரியாதை அளித்தார். நாலாயிர திவ்விய பிரபந்த சேவையுடன் 7:30 மணிக்கு தேர் புறப்பட, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

ராஜ வீதிகளில் சுவாமி உலா சென்று, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். 9:30 மணிக்கு, சுவாமி தேர் நிலையை அடைந்தது.

Advertisement