திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணி துவக்கம் ரூ.370 கோடியில் 33 கி.மீ.,க்கு அமைகிறது

1

திருநெல்வேலி:திருநெல்வேலி நகரில் நெரிசலை தவிர்க்க, மதுரை -- -கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில், 370 கோடி ரூபாய் மதிப்பில், 33 கி.மீ., துாரம் மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி சாலை, கடையம் சாலை, அம்பாசமுத்திரம் சாலை, சங்கரன்கோவில் சாலைகளுக்கு வாகனங்களில் செல்வது மிகுந்த நெரிசலாக உள்ளது.

இந்த சாலைகளை குறுக்காக இணைத்து மதுரை - -கன்னியாகுமரி நான்குவழி சாலையில் கொங்கந்தான்பாறை விலக்கு முதல் தருவை, கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, - திருப்பணிகரிசல்குளம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, ராமையன்பட்டி, சத்திரம் புதுக்குளம்,- தாழையூத்து வரை, 33 கி.மீ.,க்கு புதிய மேற்கு புறவழிச்சாலை அமைக்க, 2016ல் திட்டமிடப்பட்டது.

இதனால், அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் திருநெல்வேலி நகர பகுதிக்குள் வராமல் மதுரை அல்லது கன்னியாகுமரி நெடுஞ்சாலைக்கு செல்ல முடியும். திட்டமிட்டு, எட்டு ஆண்டு காலம் தாமதத்திற்கு பின், தற்போது நில ஆர்ஜிதம் முடிந்து சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

முதற்கட்டமாக, கன்னியாகுமரி சாலையில் கொங்கந்தான்பாறை விலக்கு, ஜோதிபுரத்தில் துவங்கி, தருவை - சுத்தமல்லி வரை 11 கி.மீ., துாரம் சாலை அமைக்க, 180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. அடுத்தகட்ட பணிகளும், டெண்டர் விடப்பட்டு துவங்கும். இரு ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement