சாத்துார் படந்தால் சந்திப்பில் நிறுத்தும் வாகனங்களால் அவதி

சாத்துார் : சாத்துார் படந்தால் சந்திப்பில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.

சாத்துார் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் படந்தால் சந்திப்பு உள்ளது. பைபாஸ் ரைடர், டிராவல்ஸ் பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் இங்குநின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இந்தப் பகுதி நான்கு திசைகளில் இருந்து அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.இதனால் இங்கு போக்குவரத்து போலீசார் காலை, மாலை நேரங்களில் நின்று வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பகுதியில் ரோட்டில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதோடு நில்லாமல் தனியார் பட்டாசு ஆலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்களும் நின்று தங்கள் வாகனங்களில் ஏறி செல்கின்றனர்.

இதன் காரணமாக நான்கு வழிச்சாலை மெயின் ரோட்டில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதன் அருகிலேயே சர்வீஸ் ரோடு உள்ளது.இந்த சர்வீஸ் ரோட்டில் பயணிகள் வசதிக்காக நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் பஸ்கள் மட்டும் மெயின் ரோட்டில் நிறுத்தவும் மற்ற வாகனங்களை சர்வீஸ் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லவும் போலீசார் அறிவுறுத்தினால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

மேலும் மெயின் ரோட்டில் நின்று பஸ் ஏறி செல்பவர்கள் எண்ணிக்கையும் குறையும்.இதன் காரணமாக விபத்து அபாயமும் போக்குவரத்து நெரிசலும் இன்றி மக்கள் பயணம் செய்ய வழி பிறக்கும்.எனவே போக்குவரத்து போலீசார் நான்கு வழிச்சாலை மெயின் ரோட்டில் அரசு, தனியார் ரூட் பஸ் கள் தவிர மற்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement