பரமக்குடியில் கள்ளழகர் இன்று இரவு ஆற்றில் இறங்குகிறார்; நாளை குதிரை வாகனத்தில் எதிர் சேவை

பரமக்குடி பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் இன்று இரவு பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

கோயிலில் மே 7 காலை பெருமாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் காலை,மாலை யாகசாலை பூஜைகள், இரவு பெருமாள் புறப்பாடு, மகாதீபாராதனை நடந்தது.

இன்று காலை கும்ப திருமஞ்சனம் நடக்க உள்ளது. தொடர்ந்து அதிகாலை 2:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி வைகை ஆற்றில் இறங்க உள்ளார்.

கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை காலை 9:00 மணிக்கு கள்ளழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகிறார். அப்போது மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து எதிர் சேவை நடக்க உள்ளது.

இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. விழா நடக்கும் கோயில் மற்றும் வைகை ஆறு பகுதிகளில் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நகராட்சி சார்பில் விழா நடக்கும் பகுதிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

--

Advertisement