ஊட்டி ரோஜா கண்காட்சியில் கடல் வாழ் உயிரினங்களின் வடிவங்களால் குதுாகலம்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி ரோஜா பூங்காவில், 20வது ரோஜா கண்காட்சி நேற்று துவங்கியது.

அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இரண்டு லட்சம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு, 'கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்' என்ற நோக்கில், டால்பின், பென்குயின், முத்து சிப்பி, நீல திமிங்கலம், மீன், கடல் கன்னி, நட்சத்திர மீன், கடல் பசு போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இவை, ரோஜா பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தது. நுழைவாயிலில் நீர்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றது. சுற்றுலா பயணியர் போட்டோ, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி உட்பட, மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலை துறையினரால் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு, இசைக்கருவி, மீன் போன்ற வடிவங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சுற்றுலாப் பயணியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

கலெக்டர் லட்சுமி பவ்யா, தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, நீலகிரி எஸ்.பி., நிஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை, சுற்றுலாப் பயணியர் கண்டுகளிக்கும் வகையில், தோட்டக்கலை துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement