சித்தா டாக்டரை கடத்திய ஐந்து பேர் சுற்றிவளைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், மானோஜிபட்டியைச் சேர்ந்தவர் இலக்கியன், 29; தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி சாலை, முனிசிபல் காலனியில் 'சிவம் சித்தா கிளினிக்' வைத்து நடத்தி வருகிறார். இலக்கியன் தன் வீட்டை புதுப்பிக்க, தனியார் நிதி நிறுவனத்தில் 92 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

இதற்கு, மானோஜிபட்டி கன்னியம்மாள் நகரைச் சேர்ந்த விஜய் ஆனந்த், 39, உதவி செய்தார். இதற்காக, விஜய் ஆனந்திற்கு 10 லட்சம் ரூபாய் கமிஷன் தருவதாக இலக்கியன் ஒப்புக் கொண்டார். ஆனால், இலக்கியன் 1.50 லட்சம் ரூபாய் தந்ததாக தெரிகிறது.

இலக்கியனிடம் பலமுறை கேட்டும், எவ்வித பதிலும் அளிக்காததால், விஜய் ஆனந்த் மே 9 இரவு, கிளினிக்கில் இருந்த இலக்கியனை, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் கடத்தினார். இலக்கியன் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, பிள்ளையார்பட்டியில் இருந்த இலக்கியனை நேற்று முன்தினம் மீட்டனர். இது தொடர்பாக, விஜய் ஆனந்த், 39, மணிகண்டன், 45, சந்திரரூபன், 26, சங்கர், 45, தர்மசீலன், 35, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement