டாஸ்மாக்கில் 'ஸ்கேன்' செய்து மது விற்பனை மாவட்டத்தில் இன்று முதல் அமல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், உள்ள 169 மதுபான கடைகளில், ஸ்கேனிங் முறையில் மதுபாட்டில் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. இந்த புதிய திட்டத்தால், கடைகளில் இருந்து ஒவ்வொரு மதுபாட்டிலும், 'ஸ்கேன்' செய்யப்பட்ட பிறகே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை, மது பானங்களின் வகைகள் உள்ளிட்ட விபரங்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.
இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் சிலர் கூறியதாவது:


டாஸ்மாக் மதுபான கடைகளில், 'ஸ்கேனிங்' முறை அமலுக்கு வந்துள்ளதால், விற்பனை விபரங்கள் அனைத்தும், உடனுக்குடன் டாஸ்மாக் அதிகாரிகளால் தெரிந்துகொள்ள முடியும். மேலும், மதுபாட்டில் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் தொடங்கி, அதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவது வரை கண்காணிக்க முடியும்.இதற்காக, ஒவ்வொரு மதுபெட்டிகள் மற்றும் மதுபாட்டில்களில், 'ஹாலோ கிராம் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. மொத்தம், ஐந்து முறை ஸ்கேன் செய்யப்படுவதால், எந்த மதுப்பெட்டி எந்த கடைக்கு சென்றுள்ளது என்பது வரையிலான விபரங்களையும் அதிகாரிகள் சுலபமாக தெரிந்துகொள்ள முடியும்.
டாஸ்மாக் கடை மதியம், 12:00 மணிக்கு திறந்து, இரவு, 10:00 மணிக்கு மூடப்படுகின்றன. இந்த நேரத்தில் மட்டுமே, 'ஸ்கேன்' செய்து மதுபாட்டில்களை விற்பனை செய்ய முடியும். பணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்போ, 'ஸ்கேன்' செய்து விற்க முடியாது.
'ஸ்கேன்' செய்யாமல் விற்பனை செய்தால், அது அந்த கடையின் விற்பனையாளருக்குத்தான் சிக்கல். புதிய நடைமுறையால் கடைகளில் இருப்பு விபரங்களில் முறைகேடு, பணத்தை செலுத்தாமல் முறைகேடு செய்வது தடுக்கப்படும். 'ஸ்கேன்' கருவியில் 'நெட்ஒர்க்' பிரச்னை இருந்தால், பாட்டில்களை, 'ஸ்கேன்' செய்து பின் கணக்குக்கு கொண்டுவரவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement