ராணுவ வீரர்களுக்காக 1,008 பால்குட ஊர்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், கொ.ம.தே.க., சார்பில், இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலமாக வாழ வேண்டும். திருமணி முத்தாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

மேலும், விவசாயம் செழிக்கவும், தொழில்வளம் பெருகவும், மக்கள் செழிப்புடன் வாழவும், பால்குட ஊர்வலம் நடந்தது. பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஈஸ்வரன், காவடி எடுத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இதில், 1,008 பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர். பரமத்திவேலுார் ரோடு மகாதேவ வித்யாலயா பள்ளி அருகில் இருந்து துவங்கிய ஊர்வலம், வேலுார் ரோடு, மேற்கு ரத வீதி, அண்ணா சிலை, வடக்கு வீதி, கிழக்கு ரத வீதி வழியாக மலை அடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி கோவில் வந்தடைந்தது. வள்ளி, தேவசேனா ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

Advertisement