'இன்டர்லாக்' சிஸ்டத்தில் ரயில்வே கேட்கள்

வடமதுரை: திண்டுக்கல் -- திருச்சி இடையே ரயில்வே கேட்கள் அனைத்தும் தற்போது 'இன்டர்லாக்' சிஸ்டத்தில் இணைக்கப்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பணியாளர் இருக்கும் ரயில்வே லெவல் கிராசிங் கேட்களில், கீப்பர்களே கையால் இழுத்து மூடவும், திறக்கும் வகையில் கேட்டுகள் இருந்தன. முன்னதாக ஸ்டேஷன் மாஸ்டர் கேட் கீப்பரை தொடர்பு கொண்டு ரயில் வருகைக்காக கேட்டை மூட அறிவுறுத்துவார். இந்த தொடர்புக்கு சான்றாக இருவரும் தங்களது பதிவேட்டில் வரிசைப்படி வழங்கப்பட்ட எண்களை பரிமாறி கொள்வர்.

அதன்பின்னரும் கேட் மூடப்படாமல் இருந்தாலோ, எவராலும் வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டாலோ ரயில் விபத்து வாய்ப்பை உருவாக்கும். ஆனால் தற்போது மேம்பட்ட பாதுகாப்புக்காக ரயில்வே கேட் திறந்திருந்தால் ரயிலுக்கு 'பச்சை' சிக்னல் கிடைக்காதபடி இருபக்கமும் கேட் தொடர்பாக தனி 'சிக்னல்' கட்டமைப்புகள் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் அய்யலுார் பிரிவில் செங்குளத்துபட்டி, சீலப்பாடியன்களம் ரோடுகளில் இருந்த கேட்டுகளில் 'இன்டர்லாக்' சிஸ்டம் நிறுவி பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

பெண்களும் சுலபமாக இயக்கலாம்



இந்த கேட்டுகளை மூட, திறக்க பல் சக்கரத்தை கை மூலம் சிரமத்துடன் சுற்றுவதற்கு பதிலாக மின்சக்தி மூலம் இயங்கும் வகையில் மாறியுள்ளது. வழக்கமாக கேட்டில் ஏதாவது பிரச்னை என்றால் இருபுறமும் இருக்கும் இரும்பு சங்கிலிகளை குறுக்காக கட்டி ரோடு போக்குவரத்தை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு ரயிலுக்கும் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதால் உடல் அசதி ஏற்படும்.

தற்போது பெண்களும் கேட் கீப்பர்களால் நியமிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அதிக சிரமமாக இருக்கும்.

இதற்காக அவசர கால கேட்டாக வெளி பக்கத்தில் நீண்ட குழாய் வடிவிலான வீல்களுடன் இரு பக்கமும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இதை எளிதாக கையால் இழுத்து சென்று ரோட்டின் குறுக்காக வைத்து 'லாக்' செய்து ரோடு போக்குவரத்தை தடை செய்து ரயில்கள் பாதிப்பின்றி செல்ல வைக்க முடியும்.

Advertisement