ஆகமம் இருக்க அணுகுண்டு வேண்டாம்: காமாட்சிபுரி ஆதினம் கருத்து

பல்லடம் : ''ஆகமம் இருக்க அணுகுண்டு தேவையில்லை'' என, கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் கூறினார்.

திருப்பூர் மாவட்டம், சித்தம்பலம் நவகிரக கோட்டையில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவை துவக்கிவைத்த அவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

உலகில் பயிர்களுக்கும், உயிர்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது. கிளை வெட்டப்பட்டால் மரம் வளர்ந்து விடும். ஆனால், மனிதன் கை வெட்டுப்பட்டால் வளராது.

பயிர்களானாலும், உயிர்களானாலும் பஞ்சபூத சக்திகள் இருந்தால்தான் வாழ முடியும். அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஹிந்து மத தத்துவம் கூறுகிறது. நான்கு யுகங்களிலும் போர் ஏற்பட்டது. அதுபோல், தற்போது, கலியுகத்திலும் போர் ஏற்பட்டுள்ளது.

இங்கு, பாகிஸ்தான் மீது நாம் அணுகுண்டு போட்டாலும், நம் மீது அவர்கள் அணுகுண்டு போட்டாலும் போவது உயிர்தான்.

உயிர் போனால் திரும்பி வராது. வைக்கோல் போர் போட்டால் கால்நடைகள் உயிர் வாழும். ஆனால், இரு நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த போர் தொடர்ந்தால் எந்த உயிர்களும் வாழ முடியாது.

ஆகமங்கள் இருக்கும்போது அணுகுண்டு தேவையில்லை. உல கில், பயிர்களுக்கும் உயிர்களுக்கும் நாசம் ஏற்படக்கூடாது என் பதை இரு நாடுகளும் உணர வேண்டிய நேரம் இது.

உலக அமைதி வேண்டி, பேச்சுவார்த்தை நடத்தி, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

நவகிரகங்கள் மற்றும் குரு பகவானின் அருளால், போர் அச்சம் நீங்கி உலகம் அமைதி பெற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement