ரூ.1.94 கோடி மதிப்பில் 19 பணிகளுக்கு காடையாம்பட்டியில் பூமி பூஜை

ஓமலுார் ;காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து மற்றும் யூனியனில், ரூ.1.94 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டில் நபார்டு திட்டத்தின் கீழ், 74 லட்சம் ரூபாய் மதிப்பில் அருந்ததியர் தெரு, மயானம், தார்ச்சாலை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகளுக்கு சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் பூமி பூஜை நடந்தது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பணிகளை துவக்கி வைத்தார். காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் குமார், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, செயல் அலுவலர் பொற்கொடி, காடையம்பட்டி தி.மு.க., நகர செயலர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து காடையாம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட, பூசாரிப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 11.42 லட்சம் ரூபாய் மதிப்பில் மயான சுற்றுச்சுவர் கட்டும் பணி, பூசாரிப்பட்டி, தாசசமுத்திரத்தில், 32.21 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், 17.25 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணி என மொத்தம், 60.88 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒன்பது திட்டப்பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டன.
நடுப்பட்டி ஊராட்சியில், நடுப்பட்டி, தளவாய்ப்பட்டி, எலத்துார், திருமலை நகர், தெற்கத்தியான்காடு ஆகிய ஊராட்சிகளில், 58.90 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. மொத்தம், 1.94 கோடி ரூபாய் மதிப்பிலான, 19 திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. சேலம் எம்.பி.,செல்வகணபதி, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் அறிவழகன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement