தேச நலன் வேண்டி சிருங்கேரியில் சிறப்பு யாகம்

இந்தியாவில் தற்போது உள்ள பதற்றமான சூழ்நிலை சுமூகமாக முடிவுக்கு வர வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்து, கர்நாடகா மாநிலம், சிருங்கேரி அருகில் கிக்கா கிராமத்தில் ரிஷயசிருங்கர் கோவிலில் சகஸ்ர சண்டி யாகம், மஹா ருத்ர யாகம், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்றது.

விசேஷ பிரார்த்தனையாக அர்களா ஸ்தோத்திரம், 10,000 முறையும், நவாக் ஷரி மந்திரம், 10 லட்சம் முறையும், 5,000 முறை சிவ பஞ்சாக் ஷ்ரியும் ஐந்து நாட்கள் ஜபிக்கப்பட்டது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீசன்னிதானம் அளித்த அருளுரை:

சிருங்கேரி சாரதாம்பாளுக்கும், மலஹானிகரேஸ்வரருக்கும் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் கிக்கா ருஷ்ய சிருங்கர் கோவிலுக்கும், 108 அடி உயரமுள்ள ராஜகோபுரம் ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வரர், ஸ்ரீஸ்ரீ மஹா சன்னிதானம் அனுக்ரஹத்துடன் அமைய வேண்டும்.

இதுதவிர இந்த யாகங்கள் தேச நலனையும், ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனும் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டது. அது விரைவில் நிறைவேற வேண்டும்.

இவ்வாறு கூறினார்.


யாக பூஜைகளில், 200க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் ஐந்து நாட்களாக தொடர்ந்து யாகம், ஜபம், பாராயணம் நிகழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமடத்தின் அதிகாரி முரளி செய்திருந்தார்.


- நமது நிருபர் -

Advertisement