விபத்து வழக்கில் இழப்பீடு உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கோரிய வழக்கில், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்ததை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.

சஞ்சீவி என்பவர் தாக்கல் செய்த மனு: எனது மனைவி மகாலட்சுமி. மதுரையிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு 2021 ல் சென்றோம். அருகிலுள்ள ஓட்டலில் சாப்பிட்ட பின் சாலையை கடந்தபோது ஒரு டூவீலர் மகாலட்சுமி மீது மோதியது. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை 'மூளைச்சாவு அடைந்தவர்,' என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவரது உறுப்புகள் தேவையானவர்களுக்காக எடுக்கப்பட்டன. கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

குற்ற வழக்கால் பாதிக்கப்பட்டதால் அதற்குரிய இழப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதை பதிவு செய்து வழக்கு பைசல் செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இடைக்கால இழப்பீடு வழங்க தமிழக உள்துறை செயலர், மதுரை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்தார்.

அரசு தரப்பு, 'இடைக்கால இழப்பீடு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது,' என தெரிவித்தது.

நீதிபதி: இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

Advertisement