கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1 ல் துவக்கம்  

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஜூன்1ல் கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா துவங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் மே 31 அன்று மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும்.

ஜூன் 1 அன்று காலை 9:25 முதல் 11:00 மணிக்குள் கொடியேற்றமும், மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் வைகாசி விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை 9:00 மணிக்கு வெள்ளி கேடகத்தில் அம்மன் வீதி உலா வருவார்.

தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப, வெள்ளி குதிரை வாகனங்களில் வீதி உலா வருகிறார். விழாவின் 7 ம் நாளான ஜூன் 7 ம் தேதி மாலை 6:00 மணிக்கு தங்க ரதத்தில் கண்ணுடைய நாயகி கோயில் வளாகத்தில் உற்ஸவம் வருவார்.

எட்டாம் நாளான ஜூன் 8 ம் தேதி களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட்டுதல், அன்று இரவு 7:00 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா நடைபெறும். ஒன்பதாம் திருநாளான ஜூன் 9ம் தேதி அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வார். அன்று காலை 9:25 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

அன்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருவார். பத்தாம் நாளான ஜூன் 10ம் தேதி காலை 8:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்துவர். பதினொன்றாம் நாளான ஜூன் 11ம் தேதி அன்று காலை உற்ஸவ சாந்தி, மாலை வெள்ளி ஊஞ்சல் உற்ஸவத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறும்.

Advertisement