மே 20 வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்

மதுரை, : அகில இந்திய அளவில் மே 20ல் நடக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மதுரை தொழிற்சங்கங்கள் பிரசார கூட்டங்களை நடத்தி தயாராகி வருகின்றன.

மத்திய அரசில் உள்ள 44 தொழிற்சட்டங்களை நான்கு தொழிற்சங்க தொகுப்பு சட்டமாக மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, ஒப்பந்த முறை, அவுட் சோர்ஸிங் முறையை கைவிட வேண்டும், முறைசாரா தொழிலாளருக்கு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

இதற்காக அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அரசுக்கு நோட்டீஸ் வழங்கி, மற்ற அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்கும் தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றன.

இப்போராட்டத்தில் போக்குவரத்து, மின்சாரம், ரயில்வே உட்பட அனைத்துத் துறைகளிலும் செயல்படும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் பலவும் பங்கேற்க உள்ளன. அதேசமயம் மத்திய அரசின் ஆதரவு கட்சிகளின் பின்னணியில் செயல்படும் தொழிற்சங்கங்கள் இதனை தவிர்க்க உள்ளன.

மதுரை மாவட்டத்தில் இப்போராட்டத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் லெனின் கூறியதாவது: இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எல்.பி.எப்.,எச்.எம்.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., யூ.டி.யூ.சி., தொழிற்சங்கங்கள் உட்பட பலவும் பங்கேற்க உள்ளன.

வேலைநிறுத்த நாளில் மதுரை கட்டபொம்மன் சிலையில் துவங்கி ரயில்வே ஸ்டேஷன் வரை ஊர்வலமாகச் சென்று மறியல் நடத்த உள்ளோம். மாவட்ட அளவில் மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி உட்பட முக்கிய பகுதிகளில் மறியல் நடைபெறும். இப்போராட்டம் குறித்து தெருமுனை கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

Advertisement