சந்தை இடம் ஆக்கிரமிப்பு கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

திருப்பூர் ; குன்னத்துார் சந்தையில் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

குன்னத்துார் பேரூராட்சியில், திங்கட்கிழமை தோறும் சந்தை கூடுகிறது; மிகப்பழமையான சந்தை, விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி வியாபாரம், விவசாய உற்பத்தி பொருட்கள் விற்கப்படுகின்றன. சுற்றுப்பகுதியில் உள்ள, 56 கிராமங்களை சேர்ந்த மக்கள், சந்தையை பயன்படுத்தி வருகின்றனர்.

நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், கூட்ட நெரிசல் அதிகம் உள்ளது; சந்தையை விரிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, பெருந்துறை எம்.எல்.ஏ.,வும் சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், காலியிடத்தை தற்காலிக கடைகளுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது; சந்தையை ஆக்கிரமிக்க கூடாது என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து குன்னத்துார் பொதுமக்கள் கூறுகையில், 'சந்தையில் உள்ள காலியிடங்களை, தற்காலிக கடை என்ற பெயரில், வாடகைக்கு வழங்க பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே, போதிய இடவசதி இல்லாமல் சந்தை நெரிசலாக இருக்கிறது, காலியிடத்தில் தற்காலிக கடை கட்டினால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்.

எனவே, பாரம்பரியமான சந்தையை விரிவாக்கம் செய்யவும், காலியிடத்தில் தற்காலிக கடை அமைக்கவும் தடை விதிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement