வங்கியில் தொழில்நுட்ப கோளாறு வாடிக்கையாளர்கள் அதிருப்தி

திருப்பூர்; 'வங்கி சேவையில்அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால், வாடிக்கையாளர் சேவையில் திருப்தியற்ற நிலை காணப்படுகிறது,' என்ற புகார் எழுந்துள்ளது.

தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாஷா, திருப் பூர் மண்டல முன்னோடி வங்கி மேலாளருக்கு அனுப்பிய மனு:

வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை அனைத்தும் வங்கிகள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. சேவைக் கட்டணம் என்ற பெயரில் நேரடியாக, மறைமுகமாக பெரும் தொகை அரசின் பொருளாதார கட்டமைப்புக்கு உதவுகிறது. வங்கிகள் லாபத்தில் பயணிக்கவும் வாடிக்கையாளர்களே காரணமாக உள்ளனர். வங்கிப் பணிகள் அனைத்தும் தற்போது கம்ப்யூட்டர் மயமாகிவிட்டன.

இணைய தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுகின்றன. பாமர மக்கள் துவங்கி பெரும் செல்வந்தர்கள் வரை வங்கிக் கணக்கை கையாள்கின்றனர். விவசாயிகள், நெசவாளிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பென்ஷனர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் வங்கி வாயிலாகவே தங்களது பண பலன்களை பெறுகின்றனர்.

பெரும்பாலான மக்கள் தங்கள் வங்கி சேமிப்புக் கணக்கை தெரிந்து கொள்ள வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தில் பதிவதன் வாயிலாக திருப்தியடைகின்றனர். ஆனால், பல வங்கிகளில் இந்த சேவையில் குறைபாடு தென்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு எனக்கூறி வாடிக்கையாளர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். பல ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுவதே இல்லை. இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகளால் வங்கி ஊழியர்களும் திணறுகின்றனர். வாடிக்கையாளர்களும் அவதிக்குள்ளாகின்றனர். இதுபோன்ற குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement