கழிவுநீரை வெளியேற்ற வலியுறுத்தி சாலை மறியல்

அனுப்பர்பாளையம்; -பாதையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், அவதிப்பட்ட மக்கள், அதனை அகற்ற வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, வஞ்சிபாளையம் ரோடு, ரயில்வே பாதைக்கு மறுபுறம் அப்பல்லோ நகர், அருள்ஜோதி நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த வீதிகளுக்கு ரயில்வே தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். தரை பாலத்தின் வழியாக செல்லும் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை. பைக்கில் செல்வோர் அடிப்படி விபத்தை சந்தித்து வந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வார்டு கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் பொது மக்கள் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் முறையிட்டு வந்தனர். அதனால், கழிவு நீர் குழாயை மாற்று பாதையில் அமைத்து மோட்டார் வைத்து கழிவு நீரை ஊரிஞ்சி வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கழிவு நீரை உறிஞ்சும் மோட்டார் பொருத்துவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து, பல முறை மண்டல அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் நேற்று காலை வஞ்சிபாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பணி நடைப்பெறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்றனர்.

இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மோட்டார் வரவழைத்து அதனை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் மோட்டாரை பொருத்தி கழிவு நீரை வெளியேற்றினர். இதனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement