சென்னையில் சுற்றித்திரியும் 1.80 லட்சம் தெருநாய்கள்; மைக்ரோசிப் பொருத்தும் நடவடிக்கை துவக்கம்

7

சென்னை: 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.



இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:


வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் திருவிக நகர் மண்டலம்,-புளியந்தோப்பு, தேனாம்பேட்டை மண்டலம், லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலம்-கண்ணம்மாபேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலம்-சோழிங்கநல்லூர், ஆலந்தூர் மண்டலம்-மீனம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் புளியந்தோப்பு, திருவிக நகர், நுங்கம்பாக்கம்,லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.


புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் நாள் ஒன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கும், மீனம்பாக்கம் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் நாள் ஒன்றுக்கு 15 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் நாள் ஒன்றுக்கு 10 தெருநாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கூடுதலாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1,2,3,4,5,7,8,11,12 மற்றும் 14 ஆகிய 10 மண்டலங்களில் நாள் ஒன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.


தெருநாய்கள் பிடிக்கும் பணிகளுக்காக 16 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நாய் பிடிக்கும் வலைகளுடன் சராசரியாக 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் என 78 பணியாளர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ள 23 கால்நடை உதவி மருத்துவர்கள், கருத்தடை அறுவை சிகிச்சையின் தரத்தினை உறுதி செய்வதற்காக 4 கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியில் 1,80,157 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு ஏப்ரல் வரை 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும், 66,285 தெருநாய்கள் மற்றும் 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.


தெருநாய்களை பிடித்தல், கருத்தடை செய்தல், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மீண்டும் விடுவித்தல் ஆகியவற்றை முறையாக கண்காணிப்பதற்காக ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கும், ரூ.3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வரும் ஜூன் மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது.


இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement