கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., பாய்ச்சல்

13

சென்னை: பொள்ளாச்சி வழக்கில் தி.மு.க.,வின் பங்கு என்ன? கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார்.


அவரது அறிக்கை: இன்று முதல்வர் ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், சி.பி.ஐ.,க்கு மாற்றியதும் அ.தி.மு.க., அரசு; விசாரித்தது சி.பி.ஐ.,; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில தி.மு.க., அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.


இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி! கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அ.தி.மு.க., அரசு!


கொடும் குற்றம் புரிந்த கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் தி.மு.க.,வைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமின்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…?


தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது.


அ.தி.மு.க., வலியுறுத்தியை அடுத்து, மத்திய அரசு தமிழகத்திற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார். முதல்வர் ஸ்டாலின் நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!


இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது தானே OG பித்தலாட்டம்? மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அ.தி.மு.க., செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Advertisement