ரூ.3.70 லட்சம் மோசடி ரயில்வே ஊழியர் கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சி தென்கரைத் தோப்பை சேர்ந்தவர் கவிதா, 28. தனியார் பள்ளி ஆசிரியை. கணவர் விஷ்ணு, அரசு வேலைக்கு முயற்சிக்கிறார்.

கவிதாவின் தோழியான சுகன்யா, 32, ரயில்வேயில் வேலை பார்க்கும் தன் கணவர் ஷாஜிக்கு, உயரதிகாரிகளை தெரியும் என்பதால், ரயில்வேயில் வேலை வாங்கித்தர முடியும் என்று கூறினார்.

தொடர்ந்து, கவிதாவை தொடர்புகொண்ட ஷாஜி, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக, 3.70 லட்சம் ரூபாய் பெற்று, நியமன ஆணையும் கொடுத்தார்.

அதை பெற்றுக் கொண்டு விஷ்ணு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அலுவலகத்திற்கு சென்றபோது, அது போலி நியமன ஆணை என்பது தெரிந்தது. இதுகுறித்து, கவிதா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்படி இருவர் மீதும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஷாஜியை கைது செய்தனர்.

Advertisement