பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை பலி டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'

சங்ககிரி:சங்ககிரி அருகே அரசு பஸ்ஸில் இருந்து ஒன்பது மாத குழந்தை விழுந்து பலியான சம்பவத்தில் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் கருங்கல்லுாரை சேர்ந்த ராஜதுரை - முத்துலட்சுமி தம்பதி. கடந்த 12ம் தேதி இரவு சேலத்தில் இருந்து கோவைக்கு இரண்டு குழந்தைகளுடன் அரசு பஸ்சில் சென்றனர். பஸ்ஸின் முன்புற படிக்கட்டு எதிரே உள்ள சீட்டில் ராஜதுரை ஒன்பது மாத ஆண் குழந்தையை தோளில் போட்டு துாங்கிக்கொண்டிருந்தார். இரவு 10:15 மணிக்கு சங்ககிரி வளையக்காரனுார் மேம்பாலத்தில் சென்றபோது டிரைவர், 'பிரேக்' போட்டுள்ளார். அப்போது குழந்தை நழுவி படிக்கட்டு கதவு சாத்தப்படாத நிலையில் வெளியே விழுந்து பலியானது.

இதுகுறித்து ராஜதுரை புகார்படி தேவூர் போலீசார் விசாரித்து பஸ் டிரைவர் சிவன்மணி 48, கண்டக்டர் பழனிசாமி 50, மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின் ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.

இந்நிலையில் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததாக கூறி சிவன்மணி, பழனிசாமியை 'சஸ்பெண்ட்' செய்து கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் துரைசாமி நேற்று உத்தரவிட்டார்.

Advertisement