பத்தாம் வகுப்பு மாணவி ரிசல்ட் பயத்தில் விபரீத முடிவு

ப.வேலுார், இன்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வரும் நிலையில், மதிப்பெண்கள் குறைவாக வாங்கி விடுவோமோ என்ற பயத்தில், ப.வேலுார் அருகே மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், பிலிக்கல்பாளையம் அருகே, நல்லாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம் (லேட்), இவரது மனைவி கவிதா, 40, பிலிக்கல்பாளையம் அருகே, சாணார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிகிறார். இவரது ஒரே மகள் கீர்த்திவாசனி, 15, பிலிக்கல்பாளையம் அரசு மேல்
நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
இன்று ரிசல்ட் வரும் நிலையில், நேற்று அவரது தாயிடம் தேர்வில் பெயில் ஆகிவிடுவோமோ என்ற கவலையில் பேசியுள்ளார். பிறகு வீட்டில் கீர்த்திவாசனி தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் மதியம், 12:00 மணியளவில் பேனில் துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணியை முடித்து விட்டு, அங்கன்வாடி மையத்திலிருந்து வீட்டுக்கு வந்த தாய் கவிதா, மகள் துாக்கிட்டு இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். புகார்படி, சம்பவ இடத்துக்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement