எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை


நியுயார்க்: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தி, கண் பார்வை பறிபோக காரணமான நபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.


பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி என்பவர் எழுதிய ‛தி. சாத்தானிக் வெர்சஸ் ‛ என்ற புத்தகம் ஒரு குறிப்பிட்ட மதத்தை அவமதிப்பதாக இருந்ததாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இவரது உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பல்வேறு நாடுகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.


கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்தார். அவரது வலது கண் பார்வை பறிபோனது.


இது தொடர்பாக ஹாடி மாதர் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, கொடூர தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.


இந்நிலையில், குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நியுயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Advertisement