நாளை விண்ணில் பாய தயார் நிலையில் பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்; இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை (மே 18) அதிகாலை 5.59 மணிக்கு இஸ்ரோவின் 101வது ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட் தயாராக உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ நாளை தன்னுடைய 101வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக 1, 696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி., 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் நாளை அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 22 மணிநேர கவுண்ட்டவுன் இன்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது.
ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர். இன்று( மே 17) மாலை 5.29 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-61 ராக்கெட் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன், விண்ணில் பாய தயாராக இருக்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

