தபால் துறையில் சிறப்பான பங்களிப்பு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கவுரவம்

கோவை : கோவை கோட்ட தபால் துறை மற்றும் ஆர்.எம்.எஸ்., கோவை கோட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கோவை அஞ்சல் கோட்டத்தில் 2024---25ம் நிதியாண்டில், அதிக எண்ணிக்கையிலான சேமிப்பு கணக்கு துவங்குதல், அஞ்சல் ஆயுள் காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, ஆதார் மற்றும் ஆர்.எம்.எஸ்., கோவை கோட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை தாண்டி, துறையின் வருவாய் பெருக்கத்துக்கு வழி வகுத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், கோட்ட அளவிலான விருது வழங்கும் விழா, காந்திபுரம், 100 அடி சாலையில் உள்ள ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் மஹாலில் நடந்தது.

கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறியதாவது:

கடந்த நிதியாண்டில், 1.5 லட்சம் புதிய சேமிப்பு கணக்குகள் துவங்குதல், அஞ்சல் ஆயுள் காப்பீட்டில், ரூ.84.1 கோடி பிரீமியம் வசூல் செய்தல் மற்றும் 2.9 லட்சம் ஆதார் திருத்தங்கள் ஆகியவற்றின் வாயிலாக, கோவை அஞ்சல் கோட்டம் சிறப்பான இடத்தை, மாநில அளவில் பெற்றுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில், பொது காப்பீடு பாலிசிகளும் அதிக எண்ணிக்கையில் பிடித்து, கடந்த நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது. இந்த சேவை, அனைத்து ஊழியர்களின் துணையோடு, வரும் நிதியாண்டில் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பல்வேறு சேவைகளில் சிறந்து விளங்கிய, 300க்கும் மேற்பட்ட தபால் மற்றும் ஆர்.எம்.எஸ்., கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement