எதிர்கொள்ள 6,500 பணியாளர்கள் தயார்

கோவை; மழைக்கால பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, 6,500 பணியாளர்கள் தயாராகஇருப்பதுடன், மர அறுவை இயந்திரங்கள், மின் மோட்டார்கள் கையாளும் குழுவினரும் களத்தில் தயாராக உள்ளனர்.

மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. சிறிது நேரம் மழை பெய்தாலே லங்கா கார்னர், அவிநாசி ரோடு மேம்பாலம், கிக்கானி பள்ளி அருகே ரயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில், மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளை திணறடிக்கிறது.

கிக்கானி பாலத்தில் இரு தினங்களுக்கு முன்பு கார் ஒன்று சிக்கிக்கொண்டது. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து, பாதிப்பு ஏற்படுத்துகிறது. மழைநீர் வடிகால் வசதி போதியளவில் இல்லாததே, இதற்கு முக்கிய காரணம்.

தற்போது இரவு, பகல் நேரங்களில் திடீரென மழை வெளுத்து வாங்குவதால் பாதிப்புகளை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 6,500 களப்பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

5,000 மணல் மூட்டைகள் 'ரெடி'



மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:

அவிநாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீரை அரை மணி நேரத்தில் வெளியேற்றும் விதமாக, 100 எச்.பி., திறன் கொண்ட மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. மழையால் விழும் மரங்களை அகற்ற, 47 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

மேற்கு மண்டலத்தில் சமீபத்தில் பெய்த மழையால், 96 மரங்கள் விழுந்துள்ளன. அவை உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. மரங்களை வெட்டி அகற்ற, 65 இயந்திரங்கள் உள்ளன. தவிர, தனியார் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மழை பாதிப்புகளை கட்டுப்படுத்த, 1,000 மணல் மூட்டைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. தவிர, 5,000 மணல் மூட்டைகள் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக்கால பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, 6,500 ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

துார்வாரும் பணி!

''நீர் வழித்தடங்கள், 60 சதவீதம் துார்வாரப்பட்டுள்ளன. தற்போது, இரண்டாம் கட்டமாக துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 18 ஆயிரம் குறுகிய பாலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைப்பு சரி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும்தலா, 1,500 பணியாளர்கள் சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்,'' என, கமிஷனர் தெரிவித்தார்.

Advertisement