விருதுநகரில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து

விருதுநகர்; விருதுநகரில் ஈஷா சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் 3 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் கே.ஆர்., காடனைச் சேர்ந்தவர் ராமபிரான் 57. இவருக்கு சொந்தமான ஈஷா சூப்பர் மார்கெட் மதுரை ரோட்டில் செயல்படுகிறது.

இந்த சூப்பர் மார்கெட்டில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு பணியை முடித்து ஊழியர்கள் பூட்டிச் சென்றனர்.

இரவு 11:30 மணிக்கு கடைக்கு உள்ளே மின் கசிவால் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

அடுத்தடுத்த கட்டங்களுக்கு மின்கசிவால் தீ பரவாமல் இருக்க உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் இங்கிருந்து வெளியேறிய வெப்பக்காற்றுடன் கலந்த கரும்புகை அருகே இருந்த தனியார் வங்கிக்கும் பரவியதால் அங்குள்ள தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை அலாரம் சப்தம் எழுப்பியது. இதனால் தீயணைப்புத்துறையினர் வங்கியில் தீ பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

இந்த விபத்தில் சூப்பர் மார்கெட்டில் இருந்த மளிகை பொருட்கள், கணினிகள், பில்லிங் மிஷின்கள் பாழானது.

சம்பவயிடத்திற்கு வந்த எஸ்.பி., கண்ணன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சந்திரகுமார் ஆகியோர் பணிகளை துரிதப்படுத்தினர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement