ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி விமரிசை

ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் மதியம் 2:00 மணி முதல், மாலை 5:30 மணி வரை, ரத்தின தனஞ்செயன், மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். ராஜநிதி இன்னிசை நிகழ்த்துகிறார்.
விழாவின் மற்றொரு நிகழ்வாக கடந்த 15ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், குண்டையார்தண்டலம் ஸ்ரீமாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவின், மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது.
இதில், முக்கிய நிகழ்வாக நேற்று காலை, அர்ச்சுனன் வேடமிட்ட நாடக கலைஞர், தபசு மரத்தில் ஏறி, தவம் செய்யும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
வரும் 25ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை ஓரிக்கை கிராமத்தினர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.