பல்கலை., ஊழியர்கள் போராட்டம் 42வது நாளாக நீடிப்பு

சிதம்பரம் : சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு காத்திருப்பு போராட்டம் 42வது நாளாக நீடித்தது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக் கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அனைத்து பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகில் கடந்த மாதம் 9ம் தேதி காத்திருப்பு போராட்டம் துவக்கினர்.

இதுவரை இரண்டு முறை பேரணியாக சென்று சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். நேற்று 42வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை பல்கலை நிர்வாகமோ, தமிழக அரசோ எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தாமல் உள்ளது.

இனியாவது பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement