வீரபாண்டி கோயில் முதல் மரியாதை பிரச்னையில் உதவி ஆணையர், செயல் அலுவலர் மீது வழக்கு
தேனி:தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் பேரூராட்சி தலைவருக்கான முதல் மரியாதையை வழக்கத்திற்கு மாறாக செய்து ஜாதிய வெறுப்புடன் பேசியதாக அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் நாராயணி உட்பட ஐந்து பேர் மீது எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இக்கோயில் சித்திரைத்திருவிழாவில் தேரோட்டம் மே 9 நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, கோயில் செயல் அலுவலர் நாராயணி, கணக்கர்கள் பாலசுப்பிரமணி, பழனியப்பன், மேலகாரர் வீரமணி ஆகியோர் வீரபாண்டி தி.மு.க., பேரூராட்சித்தலைவர் கீதாவுக்கு வழங்க வேண்டிய முதல் மரியாதையை கொடுக்காமல், வழக்கத்திற்கு மாறாக மரியாதை செய்ததாகவும், தட்டிக்கேட்ட பேரூராட்சித்தலைவர் கீதாவை ஜாதிய வெறுப்புடன் பேசி இழிவுப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து எஸ்.பி. சிவபிரசாத்திடம் பேரூராட்சி தலைவர் கீதா புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து வீரபாண்டி போலீசார் உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் நராயணி, கணக்கர்கள் பாலசுப்பிரமணி, பழனியப்பன், மேலகாரர் வீரமணி உள்ளிட்ட 5 பேர் மீது கூடுதல் எஸ்.பி., கேல்க்கர் சுப்ரமணிய பால்சந்ரா, எஸ்.ஐ., ராஜசேகர் ஆகியோர் எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.