'பாகிஸ்தான் விருது' யாருக்கு? பா.ஜ., - காங்., கடும் மோதல்

'பாகிஸ்தான் நாட்டு உயர்ந்த விருதை பெறுவதற்கு, அங்கு போய், அந்நாட்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்புடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டவருக்குதான் தகுதி உண்டே தவிர, ராகுலுக்கு அல்ல' என்று, பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கடும் பதிலடியை, தந்துள்ளது.
'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் எழுப்பி வருகிறார்.
'இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து விட்டார். இதனால் நாம் இழந்த போர் விமானங்கள் எத்தனை' என்ற கேள்வியை ராகுல் மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறார். இதை மத்திய அரசு மறுத்து விட்டாலும், இது தொடர்பான விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அமித் மாள்வியா, பாகிஸ்தான் ராணுவத் தளபதி மற்றும் ராகுல் இருவரையும் ஒப்பிட்டு, ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி வரும் ராகுல், அந்த நாட்டின் உயர்ந்த, 'நிஷான் இ பாகிஸ்தான்' சிவிலியன் விருதுக்கு தகுதியானவர்' என்ற ரீதியில் விமர்சித்துள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காங்., மூத்த தலைவர் பவன் கெரா கூறியதாவது:
நிஷான் இ பாகிஸ்தான் விருதை பெற்ற ஒரே இந்திய அரசியல் தலைவர் மொரார்ஜி தேசாய் மட்டும்தான். இருப்பினும், ஜின்னாவை மதசார்பற்ற தலைவர் எனக் கூறிய அத்வானி போன்றோர், அந்த விருதுக்கு தகுதியானவர் எனக் கூறலாம்.
அழைப்பிதழ் இல்லாமலேயே பாகிஸ்தானுக்கு சென்று, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்ட தலைவருக்கும் கூட, நிஷான் இ பாகிஸ்தான் விருதை பெறுவதற்கு தகுதி உள்ளது. 'தாக்குதலை துவங்கி விட்டோம்' என, பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அந்த விருதை பெற தகுதி உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது டில்லி நிருபர் -