தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையில் விபரீதம்; பாக்டீரியா பாதிப்பால் கேரளா இளைஞர் உயிருக்கு ஆபத்து

திருவனந்தபுரம்: கேரளாவில், வழுக்கை தலையில் முடி வளர வைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சுனில். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் முடி மாற்று சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு நுழைந்தபோது, அது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எண்ணி கூட பார்க்கவில்லை. இருப்பினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களில் அவருக்கு தலையில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கியது.
பின்னர், அவர் மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம் விளக்கினார். ஆனால் அந்த டாக்டர் சாதாரண வலி என்று கூறி, சில வலி நிவாரணி மருந்துகளை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அந்த மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகும், சுனிலுக்கு வலி போகவில்லை. இதையடுத்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு சுனில் சென்றார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பரிசோதனை செய்த டாக்டர், 'முடி மாற்று அறுவை சிகிச்சை காரணமாக அவரது தலையில் சதை உண்ணும் பாக்டீரியா வளர்ந்து வருகிறது' என கூறியதும், சுனிலும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த தனியார் டாக்டர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
13 அறுவை சிகிச்சைகள்
தற்போது, சிகிச்சை அளித்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் தலைமறைவாகி உள்ளார். தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை சுனிலுக்கு ஏற்பட்டுள்ளது. சுனிலுக்கு, தோல் ஒட்டு அறுவை சிகிச்சை உட்பட அவரது தலையில் இதுவரை 13 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கோழிக்கோட்டைச் சேர்ந்த தோல் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியதாவது: முடி மாற்று அறுவை சிகிச்சை போன்ற செயல்முறையை ஒரு தோல் டாக்டர் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே செய்ய வேண்டும். இருப்பினும், பல தகுதியற்ற மருத்துவ பயிற்சியாளர்களும் அத்தகைய சிகிச்சை முறைகளை செய்கிறார்கள்.
சுனில் எதிர்கொள்ளும் தொற்றுகளை நோயாளிகள் சந்தித்தால், அது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க டாக்டர்களை அணுக வேண்டும். முடி மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சையை நீங்கள் செய்ய விரும்பினால், டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








மேலும்
-
கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு தடை போடும் மத்திய அரசு: ராகுல்
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை திடீர் ரத்து
-
கொலை குற்றவாளியல்ல: மோசடி செய்து ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கருக்கு முன்ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன் பசவராஜ் சுட்டுக்கொலை: பலத்த அடி கொடுத்தது பாதுகாப்பு படை!
-
இனியும் தப்பிக்க முடியாது: பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த செய்தி இதுதான்; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்.,: உலக நாடுகளுக்கு விளக்க புறப்பட்டது இந்திய குழு!